சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து நாளை (மார்ச் 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த முகாமானது, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில், இம்முகாம் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞர்களில் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov) பதிவேற்றம் செய்ய வேண்டும்” என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.