அனுமன் கோவிலுக்கு அருகே அசைவ உணவை டெலிவரி செய்ய மறுத்ததால் ஸ்விக்கி ஊழியிருக்கும் கஸ்டமருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய தலைநகரான புதுடில்லியில் காஷ்மீர் கேட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மர்காட் என்ற அனுமன் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு ராம் கச்சோரி ஷாப் என்ற சிற்றுண்டி கடை அமைந்துள்ளது. இந்தக் கடை அனுமன் கோவில் வளாகத்திற்குள் கோவிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இந்தக் கடையின் ஊழியர் கரோல் பாகில் உள்ள ஹோட்டலில் இருந்து மட்டன் குருமா மற்றும் ரொட்டி ஆகியவற்றை ஸ்விக்கி மூலமாக ஆர்டர் செய்திருக்கிறார்.
இந்த ஆர்டரை டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி ஊழியர் அனுமன் கோவிலுக்கு அருகே வந்து அசைவ உணவை டெலிவரி செய்ய மாட்டேன். நீங்கள் வெளியே வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கஷ்டமருக்கு பதில் அளித்திருக்கிறார். இதனால் வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கி ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் ஸ்விக்கி ஊழியர் உணவை டெலிவரி செய்யாமலேயே சென்று விட்டார். இதன் காரணமாக அவரை ஸ்விக்கி நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் அவர் பணிநீக்கம் செய்யப்படவில்லை என பின்னர் ஸ்விக்கி நிறுவனம் அறிவித்திருக்கிறது. கோவிலுக்கு அருகே அசைவ உணவை தர மாட்டேன் என சொன்ன ஸ்விக்கி ஊழியரை அனுமன் கோவில் நிர்வாகம் அழைத்து பாராட்டியுள்ளது.