தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மதிவேந்தன். இவரது தந்தை அருந்ததிய சமூகத்தை சேர்ந்த மருத்துவர் மாயவன். மதிவேந்தன் நாமக்கல் சட்டமன்ற தொகுதியிலும், ராசிபுரம் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். வைகோ திமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் வெளியேறி மதிமுகவில் இணைந்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவுக்கே திரும்பி வந்தார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. அதில் மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது, இவரிடமிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது. வனத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வரும் அமைச்சர் மதிவேந்தனுக்கு குடலிறக்கம் இருந்து வந்துள்ளது.
அதன் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மதிவேந்தனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார். அமைச்சர் பூரண நலத்துடன் இருப்பதாகவும், அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.