CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக சென்னையை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல். தொடருக்காக சென்னை அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை அணி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 2 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ், பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார் ஆகியோருடன் இணைந்து அவர் பணியாற்றுவார். பயிற்சியில் விரிவான அனுபவத்துடன், ஸ்ரீராம் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயாஸ் கோபால், ஆப்கானிஸ்தானின் நூர் அகமது மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடங்கிய சிஎஸ்கேவின் வலிமையான சுழற்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார். முன்னாள் இடது கை பேட்ஸ்மேனும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான ஸ்ரீராம் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.