தமிழக அரசின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை சார்பில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக அரசின் விழாக்கள், துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் பாடப்பட்டது.
அதில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, ஒருசில வரிகள் விடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.
தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல என அந்த சர்ச்சைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரத்திற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா என்றும் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.