தமிழ்நாட்டில் மொத்தம் 2,381 அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்களும் இருக்கிறது. இங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தனியார் பள்ளிகளில் இருப்பது போல இதற்கான பிரத்யேக வகுப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அங்கன்வாடி குழந்தைகளின் கல்வித்திறன் குறைவாக இருந்தது. அதனால் தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதைப் போல அரசு பள்ளிகளிலும் இந்த கிண்டர் கார்டன் வகுப்புகளை அரசு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2018இல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக பரிசோதனை அடிப்படையில் மாற்றப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது. இதனால் எல்கேஜி, யுகேஜிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அப்போதே அரசுப் பள்ளிகளில் இருந்து கிண்டர் கார்டன் வகுப்புகள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியானது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இதுதொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளனர். தொடக்க கல்வித்துறை சார்பாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருகிற 7ஆம் தேதி பள்ளிகள் திறந்த பின்பு 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பான அறிவுறுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல் இந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அடிப்படை கல்வியில் இருந்தே மாணவர்களை செம்மைப்படுத்துவது தான் இதற்கு சரியான வழி. அதை விட்டுவிட்டு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நீக்கினால் மாணவர்களின் தொடக்க கல்வி திறன் பெருமளவில் பாதிக்கப்படும் என பெற்றோர்களும் கல்வியாளர்களும் கூறி வருகின்றனர். இதனால், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக நல்ல முடிவு அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.