தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார் .
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது, இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலி பெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட முடியும்.

எனவே, தண்டோரா போடக் கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார். வெள்ள அபாய எச்சரிக்கைக்காக மேட்டூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்டோரா மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே, இதனை தவிர்க்கும் வகையில் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.