தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த ஆண்டும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அதில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி 15 ஆயிரத்து 430 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் இந்த தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், அடுத்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து அமைச்சர் தற்போது பேசி இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த வருடம் மீண்டும் தேர்வு நடத்தப்படாது என்பதே இதில் தெரியவந்துள்ளது.