திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே பள்ளியில் ஆசிரியை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் 53 வயதான அன்னாள் ஜெயமேரி என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இவர் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ‘எமிஸ்’ எனும் கல்வித்துறை செயலி வாயிலாக காலாண்டு தேர்வை நடத்தியுள்ளார். மேலும் அதில் விவரங்களைப் பதிவு செய்து வந்துள்ளார். ஆனால்
தேர்வு முடிந்த பின், ‘எமிஸ்’ செயலியில் ஆசிரியை பதிவு செய்த விபரங்கள் எதுவும் இல்லை.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ஜெயமேரி, செயலியில் ஏன் நான் பதிவு செய்த எந்த விபரங்களும் இல்லை என மற்றொரு ஆசிரியையிடம் கேட்டுள்ளார். பதற்றத்துடன் மற்றொரு ஆசிரியையுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் அவரை உடனடியாக மீட்டு புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியை ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பள்ளிக்கல்விதுறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.