செனகல் நாட்டிற்கு சொந்தமான Boeing 737 செனகல் ஏர் விமானம் அந்நாட்டின் தலைநகரான டக்கரில் உள்ள விமான நிலையத்தின் பாதையில் இருந்து விலகி விபத்திற்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செனகல் நாட்டின் தலைநகர் டக்கரில் இருந்து 79 பயணிகள் இரண்டு விமானிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பமாகோ நகருக்கு புறப்பட்டு சென்ற Boeing 737 விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் எல் மாலிக் என்டியாயே தெரிவித்துள்ளார்.
டிரான்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் ஏர் செனகல் விமானம் புதன்கிழமை பின்னேரம் விபத்திற்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் விமானத்தில் பயணம் செய்த மற்ற நபர்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.