கேரள மாநிலம் தொடுபுழா அருகேயுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிறுமி உள்பட 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகேயுள்ள ஒரு மலைக் கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சிக்கியுள்ளனர். மேலும், நிலச் சரிவுடன் வெள்ளம் அடித்துவரப்பட்டதால், 5 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 நபர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமியை சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.