தஞ்சை மாவட்டம் வல்லம் மற்றும் பாபநாசம் மெலட்டூர் அய்யம்பேட்டை அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரவு சமயங்களில் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் செல்வோர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி, பணம், செல்போன், மடிக்கணினி, நகைகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக அந்தந்த காவல் நிலையங்களில் புகார் வழங்கப்பட்டது.
ஆகவே பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி உத்தரவின் பேரில், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா தலைமையில், உதவி ஆய்வாளர்களான முத்துக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் அந்த பகுதியில் செயல்பட்ட கைபேசி எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் திருச்சியை சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட காவல்துறையினர் திருச்சியில் 3 நாட்கள் தாங்கியிருந்து ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பதுங்கி இருந்த திருச்சி சர்க்கார் பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் நாகேஷ்(20) கொண்டையம்பேட்டை சேர்ந்த தயாளன் என்பவரின் மகன் சீனிவாசன்(20) அதே பகுதியை சேர்ந்த சங்கிலி என்பவரின் மகன் கண்ணன் (22), தாளக்குடியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சுரேஷ்( 35) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2️ இரு சக்கர வாகனம், 2 வீச்சரிவாள், 10 கைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி மற்றும் 10,000 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் வேறு ஏதாவது தொடர்பில் இருக்கிறார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்திருப்பதாக இவர்கள் திருச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தஞ்சை போன்ற பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல் 2 இரு சக்கர வாகனங்களில் சுமார் 5க்கு மேற்பட்டவர்கள் கூகுள் மேப் மூலம் செட்டிங் செய்து நெடுஞ்சாலை மூலமாக செல்பவரிடம் கத்தியை காட்டி விரட்டி நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து இருக்கின்றனர்.
இவர்களின் மீது திருச்சி ஸ்ரீரங்கம், திருவரம்பூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற காவல் நிலையங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனர். இவர்களுடன் வேறு யாராவது தொடர்பில் இருக்கிறார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.