இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் விளையாடிவருகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. ஏற்கனவே நடந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நேற்றைய தினம் இந்திய அணி வீரர்கள் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்றனர். சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரிஷப் பந்த் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் பிரார்த்தனை செய்ததகாக தெரிவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் “ரிஷப் பந்த் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்தோம். அவரது மறுபிரவேசம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நாங்கள் ஏற்கனவே வென்றுள்ளோம், அவர்களுக்கு எதிரான இறுதிப் போட்டியை எதிர்நோக்குகிறோம்,” என்று கூறினார்.
டிசம்பர் 30-ம் தேதி, டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ரிஷப் பந்த் முழங்கால் தசைநார் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவர் குணமடைய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும்.
ரிஷப் பந்த் முழுமையாக உடல் தகுதி பெற்று இந்திய அணிக்கு திரும்பி வர இன்னும் 6 மாத காலங்களாவது ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விபத்து காரணாமாக ஐபிஎல்லின் 2023 மற்றும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளார், மேலும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடுவதும் சந்தேகத்தில் உள்ளது. இந்நிலையில் ரிஷப் பந்த் குணமடைய இந்திய வீரர்கள் பிரார்த்தனை செய்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.