ஒடுகத்தூர் அருகே இரவில் பஸ்சுக்கு காத்திருந்த கல்லூரி மாணவியை வாழைத்தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் அணைக்கட்டு அருகே உள்ள தார்வழி பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே, ஒடுகத்தூர் அருகே 17 வயது இளம்பெண் அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள தனியார் துணி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வரும்போது அவரது தந்தை வந்து அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் துணி கடைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் கத்தாரிக்குப்பம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துள்ளார். அவரது தந்தை வரவில்லை. இதனை நோட்டமிட்ட பேக்கரி கடை மாஸ்டர் சரத்குமார், மாணவியின் கையை பிடித்து தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் வரமறுத்து கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது, சரத்குமார், மாணவியின் வாயில் துணியை கட்டி அருகில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர், கை, வாயை கட்டிப்போட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளாம். இதையடுத்து, இரவு 10 மணியளவில் வீட்டிற்கு சென்ற மாணவி, தாயிடம் அழுதுகொண்டே இந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி வேப்பங்குப்பம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சரத்குமாரை கைது செய்தனர்.