அண்ணாமலைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து மத்திய அமைச்சராக்கும் வாய்ப்பும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. இந்நிலையில், அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, பாஜகவின் அமைப்பு ரீதியான பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட இருக்கிறது.
தற்போது பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா பதவி வகித்து வரும் நிலையில், இவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. விரைவில் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த சூழலில் தான், அண்ணாமலைக்கு பாஜக தேசிய தலைவர் பதவி வழங்கலாம் என அவரது ஆதரவாளர்கள் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தேசிய தலைவர் பதவி என்பது அண்ணாமலைக்கு கொடுக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் குறைவு. மேலும், பாஜகவில் சில ஆண்டுகள் மட்டுமே பணியாற்றியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டுமே அவர் பணியாற்றி இருக்கிறார். வெளிமாநிலங்களில் பிரசாரம் செய்ய மட்டுமே செய்திருக்கிறார். இதனால், அவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படாது. மாறாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பதவி என்பது வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதோடு அண்ணாமலைக்கு இப்போது 40 வயது தான் ஆகிறது. இதனால் பாஜகவின் தேசிய இளைஞர் அணி (யுவ மோர்ச்சா) தேசிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பொறுப்பில் அண்ணாமலையின் நண்பரான எம்பி தேஜஸ்வி சூர்யா செயல்பட்டு வருகிறார். இவருக்கு மாற்றாக அண்ணாமலையை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக மேலிடத்தை பொறுத்தவரை அண்ணாமலையை கட்சி சார்ந்து அமைப்பு ரீதியான பணிகளில் ஈடுபடுத்த தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஒருவேளை அண்ணாமலை விரும்பாத பட்சத்தில் அவரை தேசிய அரசியலில் ஈடுபடுத்துவதற்கு மாற்று வழியை பாஜக கையில் எடுக்கலாம். அதாவது, அண்ணாமலைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து மத்திய அமைச்சராக்கும் வாய்ப்பும் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட விரும்பாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர்.