தமிழகம் முழுவதும் நாளை 38 மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவலில், அரசின் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி. 10-ம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் முறையில் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்;பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வினை 9,35,354 ஆண்களும், 12,67,457 பெண் தேர்வுகளும், 131 திருநங்கைகளும், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் 6,635 பேர் எழுத உள்ளனர். இதற்காக 7, 689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு பணியில் 1,10,150 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1,932 பறக்கும் படைகள், 534 சிறப்பு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி மூலமாகவும் 7,689 இடங்களில் இருந்து வரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. சென்னையில் 53 மையங்களில் 1,56,218 பேர் எழுதுகின்றனர். தேர்வினை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தேர்வாணையம் தெர்வித்துள்ளது.