அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி நடந்த ஒரு திருமணத்தில் தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் வந்துள்ளனர். திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பாக மணமகன் பட்டு வேட்டி சட்டையில் உட்கார வைக்கப்பட்டு இருந்திருந்தார். திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது மணமகனின் நடவடிக்கையை பார்த்த அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மணமகளுக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் தள்ளாடியபடியே அமர்ந்திருந்த மணமகன், ஒரு கட்டத்தில் மேடையில் அமர்ந்திருக்க முடியாமல் திடீரென்று சாய்ந்து இருக்கிறார். அப்போது ஒருவர் பிடித்துக் கொள்ள அவரின் மடியிலேயே படுத்து தூங்கி இருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள், மாப்பிள்ளையின் நடவடிக்கை குறித்து பெற்றோரிடம் புகார் அளிக்க பெற்றோரும் உன் விருப்பம் என்று சொல்ல, திருமணத்தை உடனே நிறுத்தி இருக்கிறார் மணமகள். மணமேடைக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டு மணமகள் அறையிலேயே இருந்திருக்கிறார்.
திருமணத்தை நிறுத்த முடிவு செய்த மணப்பெண் வீட்டார் உடனே போலீசிலும் புகார் அளித்துள்ளனர். உடனே திருமண செலவுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மணமகள் வீட்டாரும் வலியுறுத்தியிருக்கிறார்கள். போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது எல்லாம் நடந்தபோது என்ன நடக்கிறது என்று தெரியாமல் மணமகன் போதையில் மணமேடையில் தூங்கி இருக்கிறார்.