தலித் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி, சிறுநீர் கழித்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லிக் கொண்டாலும், தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், இன்றளவும் சாதிய கொடூரங்கள் அரங்கேறிதான் வருகின்றன. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் தான், ராஜஸ்தான் மாநிலம் ஃபதேபூர் பகுதியில் தலித் இளைஞர் மீது சிலர் சிறுநீர் கழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரண்டு பேர் கடுமையாக தாக்கி, அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். மேலும், அவரது ஆடைகளை கழற்றி பிறப்பிறுப்பில் தாக்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியே இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து, அந்த இளைஞர் அதிர்ச்சியில் இருந்ததால், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் புகாரளித்தனர். இதையடுத்து, தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில், “அவர்கள் (குற்றம் செய்தவர்கள்) குடிபோதையில் இருந்தனர். என்னை ஒரு பாட்டிலால் அடித்தார்கள். என் மீது சிறுநீர் கழித்தார்கள். சாதி பெயரை சொல்லி திட்டினார்கள். தாங்கள் செய்ததை வீடியோவையாக பதிவு செய்திருப்பதாகவும், இதை யாரிடமாவது சொன்னால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான டிகா ராம் ஜூலி கூறுகையில், “இதுதான் இன்றைய ராஜஸ்தானின் யதார்த்தம். தலித் இளைஞர் கடத்தப்பட்டு அடித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டார். இது சினிமா காட்சி அல்ல. வெட்கக்கேடான உண்மை” என்று தெரிவித்துள்ளார்.