வேப்பூர் அருகே கணவரை கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவி மற்றும் மகன், மகள்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் புஷ்பநாதன் என்ற மகனும், 10ஆம் வகுப்பு படிக்கும் கலைவாணி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆறுமுகம் 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார். வீட்டில் இருந்த ஆறுமுகம் கடந்த 7ஆம் தேதி இறந்ததாக கூறப்படுகிறது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகம் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில், ஆறுமுகம் இயற்கை மரணம் அடையவில்லை என்றும் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்ததது. இதனால் தீவிர விசாரணை மேற்கொண்ட வேப்பூர் போலீசார் ஆறுமுகம் மனைவி தீபாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆறுமுகம் தீபா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி தீபா மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தீபா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த 6ஆம் தேதி இரவு ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து உறங்கி கொண்டு இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட தீபா மற்றும் அவரது மகன் புஷ்பநாதன், மகள் கலைவாணி 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஆறுமுகம் இயற்கையாக மரணம் அடைந்தார் என நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, தீபா, அவரது பிள்ளைகள் புஷ்பநாதன், கலைவாணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.