சென்னை போரூரில் நகர்ப்புற சமுதாயம் நல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. கால் வலி காரணமாக நடிகர் கஞ்சா கருப்பு இன்று காலை 10 மணியளவில் இந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் கஞ்சா கருப்பு சத்தம் போட்டுள்ளார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற மூதாட்டி ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் மூதாட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்காக அவரை வேறு மருத்துவமனைக்குப் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். மேலும், காலை 7 மணி முதல் மருத்துவர்கள் இல்லாததால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கஞ்சா கருப்புடன் இனைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகக் கஞ்சா கருப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், “அரசு மருத்துவர்கள் ரூ.2.5 லட்சம் சம்பளத்தை வாங்கிக் கொண்டு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். அதனால் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது பற்றி மருத்துவத் துறை அமைச்சர் பேச வேண்டுமா?. இல்லையா?. இதற்காகப் போராட்டம் செய்யப் போகிறோம். வெறி நாய் கடித்து ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். மண்டை உடைந்து மாணவர்கள் ஒருவர் அமர்ந்துள்ளார்” என பரபரப்பாக பேசியுள்ளார்.