ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியீட்டு விழா செய்தி குறிப்பில்; மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023-ம் தேதியன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்தூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று 12.00 முதல் 12-ம் தேதி மாலை 05.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும்.
மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் முதலியவைகளை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதே போல் மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் இணையதளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் இருவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.