Tiger: வயநாட்டில் மக்களை அச்சுறுத்திவந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட ஆட்கொல்லி புலியின் வயிற்றில் இருந்து இறந்த பெண்ணின் மேலாடை பட்டன், கம்மல், தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி, பஞ்சாரகொல்லி பகுதியில் கடந்த 24ம் தேதி காபி பறிக்கச் சென்ற பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து புலியை சுட்டுக் கொல்ல வலியுறுத்தி கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில், நேற்று முன் தினம் காலை புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை பணியாளரை புலி தாக்கியது.
இதைத் தொடர்ந்து புலி தாக்கி உயிர் இழந்த பெண்ணின் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்தரனை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து புலியை உடனடியாக சுட்டுக் கொள்வதற்கான உத்தரவும் வெளியானது. நள்ளிரவு புலி பிலாக்காவு பகுதியில் நடமாடியதை உறுதி செய்த வனத்துறையினர் அதனை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்தனர்.
பிலாக்காவு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று காலை புலியை பிடிப்பதற்கான ஆயத்த பணிகளை வனத்துறை குழுவினர் மேற்கொண்டார்கள். இதற்காக புலி நடமாட்டம் உள்ள 4 கிராமங்களில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டிருந்தது. அப்போது, அந்த புலி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண் கொல்லப்பட்ட பகுதியில் 24 ஆம் தேதி பதிவான புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது உயிரிழந்தது அதே புலி தான் என வனத்துறை உறுதி செய்திருக்கிறது. புலியின் உடலில் ஏராளமான காயங்கள் இருக்கின்றன. ஏற்கனவே வேறொரு புலி உடன் ஏற்பட்ட மோதலில் இது பலத்த காயம் அடைந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர்.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வும் செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள வயநாடு வனத்துறையினர், “சுமார் 7 வயது மதிக்கத்தக்க இந்த பெண் புலியின் கழுத்து பகுதியில் 4 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பதைக் கண்டோம். காட்டில் வேட்டையாடும் திறனை இழந்த காரணத்தாலேயே பெண்ணை தாக்கியிருக்கலாம். புலியின் வயிற்றுக்குள் பெண்ணின் தலைமுடி, கம்மல், மேலாடை பட்டன் போன்றவை இருந்தன. உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.