மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை வாபஸ் பெற்றது.
மதுரை மாவட்டம் நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவருகிறார்கள். இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த நிலையில் இக்கோயிலில் பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது. உடனுக்குடன் அவற்றை உண்டியலில் செலுத்த வேண்டும் என கோயில் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பினார்.
அந்த சுற்றறிக்கையில்; மதுரை நகர், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையினை உண்டியலில் செலுத்த உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும், தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தட்டு காணிக்கை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை வாபஸ் பெற்றது. தட்டுக்காணிக்கையை உண்டியலில் செலுத்தும் அறிவிப்பு செயல் அலுவலரின் தன்னிச்சையான முடிவு என்றும் தட்டுக்காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு தொடர்பாக செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அறநிலையத்துறை விளக்கம் அளித்துளளது.
Read more : ஐந்து வருட தடைக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வருகிறது ஷீன் ஷாப்பிங் செயலி..!!