சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் முலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பிரத்யேகமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் மகளிருக்கு கீழ்கண்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம், மாற்றுசான்றிதழ், சாதிசான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும்திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும்பட்சத்தில் இணைதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 89255 33941, 89255 33942 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 20.07.2022 புதன் கிழமை அன்று பிற்பகல் 3.0௦ மணியளவில் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், 21.07.2022 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும் நடத்தப்படுகிறது. புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.