மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக நாளை முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 2.௦௦ மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்குவதற்காக பதிவு செய்தல், மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை, வங்கிகடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய்த் துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு, புதுபித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருதல், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், மாவட்ட தொழில் மையம் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்..
மேலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கிகடன் உதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி திட்டத்தின் மூலம் சுயதொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடுகட்டு கட்டுவதற்கு கடனுதவி, ஆவீன் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கான முகவர்கள் நியமனம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டிற்கான உறுப்பினர் சேர்க்கை போன்ற பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் பெறும் பொருட்டு, பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.