உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, 5 நாள் விசாரிக்க செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக புகார்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு செந்தில் பாலாஜி மனைவி மற்றும் அமலாக்காத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றது.இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியம் என அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதோடு, அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியான நடவடிக்கை எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)-ன் கீழ் அமலாக்த்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என்று தெரிவித்தனர். அதன்படி, அமலாக்கத்துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிடப்பட்டது.
உச்சிநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவே புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜி ஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.