நீதிமன்ற உத்தரவு படி ரயில்வே இழப்பீடுத் தொகை வழங்காததால், சம்புரான் சிங் என்ற விவசாயி நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ரயிலின் உரிமையாளர் ஆனார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் சம்புரான் சிங். 2007ஆம் ஆண்டு லூதியானா – சண்டிகர் ரயில் பாதை அமைக்கப்பட்டபோது இந்திய ரயில்வே விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தியது. ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் நிலத்துக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டது. சம்புரன் சிங்கின் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தன் நிலத்திற்கு ரயில்வே குறைவான பணம் கொடுத்ததாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரித்தது. மேல்முறையீட்டில், அது மேலும் அதிகரித்து ரூ.1.47 கோடியாக உயர்ந்தது.
2012ஆம் ஆண்டு வடக்கு ரயில்வே 2015ஆம் ஆண்டுக்குள் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஆனால், ரயில்வே ரூ.42 லட்சம் மட்டுமே வழங்கியது. மீதியுள்ள 1.05 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையைக் கொடுக்க முடியவில்லை என்று ரயில்வே கூறிவிட்டது. ரயில்வே சார்பில் பாக்கி பணத்தைச் செலுத்தாததால் 2017ஆம் ஆண்டு லூதியானா நிலையத்திற்கு வரும் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. சம்புரன் சிங் தன் வழக்கறிஞர்களுடன் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரயில் சிறைபிடிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே ரயில் விடுவிக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து சம்புரான் சிங் அந்த ரயிலின் உரிமையாளராக மாறினார். இப்படித்தான் சம்புரான் சிங் நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ரயிலின் உரிமையாளர் ஆனார்.