மழைக்காலம் வந்துவிட்டாலே பல நோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கும். அந்த வகையில், தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பரவுவது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுகளில் விழியின் வெண்படலத்தை பாதிக்கும் கண் நோயும் ஒன்று. மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் இந்த நோய், வைரஸ், பாக்டீரியா அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் கண் சிவப்பாக மாறி, கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் கூச்சம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த மெட்ராஸ் ஐ நோயால் அருகில் இருப்பவர்களும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு தொற்று நோய் என்பதால் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு இந்த நோய் வந்தால் மற்ற அனைவருக்குமே எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். லேசாக கண் உறுத்தலுடன் தொடங்கும் இந்த நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது அவசியம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சுயமாக கண் சொட்டு மருந்துகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நோய் தீவிரமடையும் முன்பு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ் ஐ என்ற இந்த கண் நோயின் முக்கிய அறிகுறிகள் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்படைதல் ஆகியவை ஆகும். இவை தவிர் கண் இமை வீக்கம், குழந்தைகளுக்கு காய்ச்சலும் ஏற்படலாம்.
மெட்ரால் ஐ தொற்றில் இருந்து எப்படி தற்காது கொள்வது..?
* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
* நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை தவிர்க்க வேண்டும்.
* எளிதில் நோய் பரவும் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தெரிந்தால், அவர்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது.
* மெட்ராஸ் ஐ பாதிப்பு இருந்தால் காண்டாக்ட் லென்ஸ் அணிவோர், அவற்றை தவிர்க்க வேண்டும்.
* நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கேரட், பப்பாளி, சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை சாப்ப்பிடலாம்.