கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராஜா வீட்டில் இருந்துள்ளார். அப்போது குழந்தைகள் 3 பேரும் தங்கள் தந்தையிடம் பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால், ராஜா தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கி, அதனை தனது குழந்தைகளுக்கு ஊட்டியுள்ளார். அப்போது பிரயாணியில் பூரான் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதில், பாதிப் பூரானை குழந்தை அஜய் கிருஷ்ணா விழுங்கிய நிலையில், மீதியை தட்டில் துப்பியுள்ளான். இது ராஜாவுக்கு பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது. பூரான் கிடந்த பிரியாணியுடன் குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போது குழந்தையின் உடல்நிலையில் பெரியளவில் பாதிப்பு இல்லையென கூறினர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஹோட்டலில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.