முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை பேருந்தில் அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒடிசா மகளிர் ஆணையம் மாநில போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியுள்ளது. ஒடிசாவில் மூடநம்பிக்கை காரணமாக பேருந்தில் முதல் பயணியாக பெண்களை கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுவதில்லை. முதலில் பெண்களை ஏற்றினால் விபத்து ஏற்படும் அல்லது அன்றைக்கு டிக்கெட் விற்பனை மோசமாக இருக்கும் என கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு அல்லது தனியார் பேருந்து எதுவாக இருந்தாலும் அதில் முதல் பயணியாக வரும் பெண்களை கண்டிப்பாக ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் பெண்களை பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் நடத்துவதை போக்குவரத்து துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒடிசா மகளிர் ஆணையம் அரசை வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.