சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, தைலமர காட்டுக்குள் 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை, ரங்கநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அங்கு சிறுமிக்கு, குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, தனது நண்பர்களான மணி மற்றும் 3 பேரை செல்போனில் தொடர்பு கொண்டு தைலமர காட்டுக்கு வரவழைத்தான். பின்னர், போதையில் இருந்து சிறுமியை ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமியை அங்கிருந்து விடுவித்த பலாத்கார கும்பல், இதுபற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை வரவழைத்து 3 முறை பாலியல் பலாத்காரத்தில் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை பெற்றோர் அறிந்தனர். இதையடுத்து சிறுமியை, கடந்த ஜூன் மாதம் திருச்சியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதைதொடர்ந்து குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமி தற்போது காப்பகத்திலேயே தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 5 பேரில் ஒருவன், அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளான். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த சிறுமியின் பெற்றோர், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காப்பகத்தில் இருந்த சிறுமியை, மகளிர் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன் (21), மணி (24), தர்மன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.