கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (19). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், குடியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் ரேஷ்மாவை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே, ரேஷ்மா பணிபுரியும் கனி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்கும்படி ரேஷ்மாவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் காதலிக்க மறுத்ததால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேஷ்மா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் கழுத்து, முகம் உட்பட 4 இடங்களில் ரேஷ்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீராம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் ரேஷ்மாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணையில் ஈடுபட்டு தலைமறைவான ஸ்ரீராமை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், காதலிக்க மறுத்த பெண்ணின் மீது கத்தியால் தாக்கிய சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.