தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி அதற்கான கோப்புகளை தமிழக அரசிடம் ஒப்படைத்திருந்தது. இந்நிலையில், அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு என்பவர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் மறைந்துக் கொண்டு போலீசார் சுட்டுள்ளனர். அப்போதைய ஆட்சியர் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டுள்ளார். புத்தி சுவாதீனம் இல்லாதவர்போல் இப்படி நடந்து கொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல. வேட்டைக்காரர்கள் போல் காவல்துறை செயல்படக் கூடாது. சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்துகொண்டதால் `அப்படி சுட வேண்டும்’ என்ற எண்ணம் சுடலைக்கண்ணுவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தன் கடைமையிலிருந்து தவறி, அலட்சியமாக செயல்பட்டதால் துப்பாக்கிச்சூடு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் எந்த விதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.