வரும் 7ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 7ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கன மழைக்கும், நாளை கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.