தனியார் மருத்துவமனையில் பணம் கட்டி விட்டு இறந்தவர் உடலை எடுத்து செல்ல கூறிய நிலையில், அந்த நபர் உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்தில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அவர் ஹோசியார்பூரில் உள்ள ஐ.வி.ஒய். என்ற பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை ஐ.சி.யூ.வில் சேர்க்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்களின் 4 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பிறகு பகதூர் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிகிச்சைக்கான தொகையை கட்டி விட்டு, இறந்தவரின் உடலை எடுத்து செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளார். இதற்கிடையே, பகதூர் உடல் அருகே சென்றபோது, உடலில் லேசான அசைவு காணப்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் பகதூர் சிங்கை பி.ஜி.ஐ. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். சில மணிநேர சிகிச்சைக்கு பின்னர் பகதூர் சிங்கிற்கு சுயநினைவு திரும்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து, பகதூரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தில் பகதூர் சிங்கும் கலந்து கொண்டார்.