குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ். நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் 3-வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருபவர் மணிகண்டன் (37). மதுரையை சேர்ந்த இவர், தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் ஒரு வருடமாக குடியிருந்து வருகிறார். இவர் அருகில் உள்ள கோவிலில் பூ விற்பனை செய்து பூசாரியாக செயல்பட்டு வருகிறார். கணவன்-மனைவி இடையே அவ்வப்போது சண்டை எழுந்து வரும் நிலையில், நேற்று மாலை ஏற்பட்ட சண்டையின் போது மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து பல இடங்களில் வெட்டி மணிகண்டன் கொலை செய்துள்ளார்.
சண்டை தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கேட்ட போது தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர், கொடுத்த தகவலின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் மனைவியின் உடலையும், தலையையும் கைப்பற்றி மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் பவித்ராவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து தற்போது டிஎம்எஸ் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததும் தெரியவந்தது.
அப்படி, நேற்று நடந்த சண்டையில் மணிகண்டன் பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்ரா, மணிகண்டனை அடித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பவித்ராவை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த நிலையில், இச்சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீசார், கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.