இரண்டு ஆண்டுகளாக நண்பனுடன் சேர்ந்து மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்த கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை சிலர் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரத்தக்காயங்களுடன் மிகவும் சோர்வாகவும் பயந்த நிலையிலும் இருந்த அந்தப் பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது பெண்ணின் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, குன்னம்குளம் போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்த போது, அந்த பெண்ணின் கணவர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த தொழில் அதிபரையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். தொழில் அதிபர் மீது மனைவியை இயற்கைக்கு மாறாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது நண்பர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து திருச்சூர் போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், சென்னையில் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார். மேலும் தனது நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டுள்ளார். இரும்பு சங்கிலியால் அந்த பெண்ணை கட்டி வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த தொழில் அதிபர் ஈவுஇரக்கமின்றி தனது சொந்த மனைவியையே ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டி சித்ரவதை செய்துள்ளார்.

மனைவி எதிர்ப்பு தெரிவித்த போது ஆபாச படங்களை காட்டி, சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். தொழில் அதிபரின் இந்த மிரட்டலால் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளார். இதனை சாதகமாக அந்த தொழில் அதிபரும், அவரது நண்பரும் பயன்படுத்திக் கொண்டனர். நினைத்த போது எல்லாம் அவர்கள் இருவரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த தொழில் அதிபர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை கடுமையாக தாக்கி உள்ளார். மேலும் அவர்கள் இருவரும் அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் பீர் பாட்டிலால் காயப்படுத்தி உள்ளனர்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் கதறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதற்கு பிறகுதான் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கணவரால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுக்கொண்டே சொன்னார். அவருக்கு நிறைய கொடுமைகள் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நடத்திய விசாரணையில் பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரை கைது செய்து உள்ளோம்” என போலீசார் தெரிவித்தனர்.