வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். பின்னர், ஆந்திராவில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆண்டோ – மெர்லினா ஆகியோர் பிப்.9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.