சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை தொடங்கவுள்ளது. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட சுமார் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. ஆனால், இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனைக் கண்டித்தும், சனாதனம் மற்றும் தமிழ்நாடு குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செவ்வாய் கிழமை பேரவை நிகழ்வுகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டு ஆளுநர் உரை மீதான விவாதம் புதன்கிழமை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.