கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் ரேகா (18). இவர், சென்னை திருவான்மியூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் முதல், மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலை செய்யும் பணிக்கு சேர்ந்தார்.
ஆனால், ரேகாவுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து ரேகாவை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தியும், நிர்வாணப்படுத்தியும் உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரேகா அளித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று ஆந்திராவில் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினாவை பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.