ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், குக்கர் சின்னம் கிடைக்காததால் வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒரு பக்கம் அதிமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மற்றொரு பக்கம் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைக்க அமைச்சர்கள் தெருத் தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், திடீரென தள்ளுவண்டி கடைக்கு சென்றார். பின்னர் கடையில் பரோட்டா போட்டிக் கொண்டிருந்த தொழிலாளியிடம் ஓய்வெடுக்க கூறிய செஞ்சி மஸ்தான், பரோட்டா போடும் பணியை செய்ய தொடங்கினார். சப்பாத்தி கட்டையை கையில் எடுத்து மாவை தேய்த்து, பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டாவை வீசி, இறுதியாக எண்ணெய் ஊற்றி கல்லில் போட்டு பரோட்டா சுட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.