புதுச்சேரி மாநிலம் சின்னையாபுரம் பகுதியில் அக்கா சுவாமிகள் மடம் வீதியை சார்ந்தவர் கிருஷ்ணன். இவர் உருளையன்பேட்டை என்ற இடத்தில் இருக்கின்ற ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருக்கு சென்னை திருவான்மியூர் பகுதியை சார்ந்த ரமா என்ற மகாலட்சுமி(55) மற்றும் அவருடைய மகன் சபரி(31) உள்ளிட்டோர் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் தங்களை தமிழக குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றுவதாக தெரிவித்தாக சொல்லப்படுகிறது. வீடு கட்டுவதற்காக 1.50 கோடி ரூபாய் கடனாக வாங்கி தருவதாகவும், 6 மாதம் சென்ற பின்பு மாநில அரசு அந்த கடனை தள்ளுபடி செய்திடும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இதற்கு அனுமதி வாங்குவதற்காக கிருஷ்ணன் தவணை முறைகளில் 2.50 கோடி ரூபாய் வரையில் அவர்களுக்கு பணம் வழங்கியுள்ளார்.
கிருஷ்ணனிடம் பணத்தை வாங்கிக் கொண்ட ரமாவும், அவருடைய மகன் சபரியும், அவருக்கு கடன் வாங்கியும் கொடுக்கவில்லை, அவர் கொடுத்த பணத்தை திருப்பியும் கொடுக்கவுமில்லை. தான் பணத்தை ஏமாந்ததை அறிந்த கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதுச்சேரி சிபிசிஐடி காவலர்கள் அந்த இருவரையும் தேடி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ரமாவும், அவருடைய மகன் சபரியும் சென்னை திருவான்மியூர் பகுதியில் தலைமறைவாக இருந்தது சிபிசிஐடி காவல்துறையினருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முன்தினம் தாய், மகன் உள்ளிட்டோரை கைது செய்து புதுவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜெர்ப்படுத்தி அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.