சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோர் மீது பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அதன்படி, கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என சிவகங்கை ஒருங்கிணைந்த எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.. இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் வெளியாகி உள்ளன.. அதன்படி குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. தீர்ப்பின் முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை..