வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த இடைவிடாத மழை,, விளைச்சல் பாதிப்பு ஆகிய காரணங்களால், பல மளிகை பொருட்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது..
மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, சோம்பு, சீரகம், கசகசா உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதே போல் கேரளா, ஏற்காடு, கொல்லிமலையில் மிளகு பயிரிடப்படும் நிலையில்,், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரிய வெங்காயமும், ராஜஸ்தான் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டும் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் தானியங்கள் இந்த மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.. இந்த மாநிலங்களில் அறுவடை செய்யப்படும் தானிய வகைகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த சூழலில் கடந்த மூன்று மாதமாக வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் தானியங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து வழக்கமாக வரவேண்டிய தானியங்களின் வரத்து குறைந்துள்ளதால், பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய வியாபாரிகள் “ தமிழகத்தின் உணவுப்பொருட்களில் 60 சதவீதம் வடமாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் வடமாநிலங்களில் இருந்து தானிய வகைகள் விற்பனைக்கு வரும். இப்பொருட்கள் ஏப்ரல் கடைசி வாரம் வரை வரத்து இருக்கும். இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக வடமாநிலங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் விருதுநகர், கொளத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் விளைச்சல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.200க்கு விற்ற ஒரு கிலோ மிளகாய் வற்றல் 50 சதவீதம் அதிகரித்து ரூ.320 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பீன்ஸ் உள்பட பல பொருட்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் ரூ.95க்கு விற்ற ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.105-க்கும், ரூ.100க்கு விற்ற உளுத்தம் பருப்பு தற்போது ரூ.125-க்கும், ரூ.80க்கு விற்ற கொண்டைக்கடலை, தற்போது ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. பட்டாணி ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில், ரூ.80ஆக விலை உயர்ந்துள்ளது.. இதே போது பச்சைப்பயறு ரூ.90-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.95ஆக விலை அதிகரித்துள்ளது. சீரகம் கிலோ ரூ.320, சோம்பு ரூ.280, கசகசா ரூ.1300, வெந்தயம் ரூ.120, மிளகு ரூ.500 என விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும்.. தீபாவளிக்குப் பிறகு அனைத்து பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது..” என்று தெரிவித்தனர்..
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு தற்போது இந்த மளிகை பொருட்களின் விலை உயர்வும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது..