ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் வசித்து வரும் அடைக்கலம் மகன் முருகானந்தம் (20). இவர் தனது பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி(65) ஒருவர் அந்த வழியாக வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார். அந்த மூதாட்டி முருகானந்தத்திடம் பைக்கில் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது கும்மங்களம் அருகே வந்தபோது அங்கிருக்கும் குளக்கரையில் வைத்து முருகானந்தம் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது மூதாட்டி சத்தம் போட்டதால். முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மூதாட்டி முகம், கைகளில் குத்தினார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்த முருகானந்தம் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல்துறையினர் தப்பியோடிய இளைஞரை தேடி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த இளைஞரை ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி கைது செய்து விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் முருகானந்தத்தை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.