தஞ்சையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், தனது பணியாளர்களை உற்சாகப்படுத்த 11 சொகுசு கார்களை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தஞ்சையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஹம்சவர்தன் 2014ஆம் ஆண்டு பிபிஎஸ் என்ற மென் பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். 4 பேருடன் ஆரம்பித்த நிறுவனம், தற்போது 400 பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்துவிட்டது. இந்நிலையில், தனது ஊழியர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் பரிசு ஒன்றை வழங்க ஹம்சவர்தன் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஊழியர்களை அவர்களின் குடும்பத்தினருடன் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார். சிறப்பாகப் பணிபுரியும் 11 பேருக்கும் ஒரு சொகுசுக் காரை சர்ப்ரைஸ் கிஃப்டாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்தத் திடீர் பரிசு கிடைத்ததால் நெகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள் 11 பேரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஹம்சவர்தனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்தப் பரிசு 11 பேரில் 5 பெண் ஊழியர்களும் 6 ஆண் ஊழியர்களும் அடங்குவர்.
வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக வேலை செய்து நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பணியாளர்களுக்கு கார்களைப் பரிசளிக்க இருப்பதாகவும் ஹம்சவர்தன் கூறியுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியைச் சேர்ந்த 10,000 இளைஞர்களுக்குத் தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கொடுப்பதுதான் தனது லட்சியம் என்றும் ஹம்சவர்தன் தெரிவித்துள்ளார்.