சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 48வயது பெண் ஒருவர் வயதான முதியவரை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் “வாட்ஸ் ஆப்” எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு “ஆபாசமாக படங்களை போட்டு அதில் செல்போன் எண்ணையும் பதிவிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று கூறி மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், குறுஞ்செய்தி வந்த எண்ணை பிளாக் செய்தார், மேலும் இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து சேலம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் செய்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
“ஆண்டிஸ் நம்பர் எக்ஸ்சேஞ்” என்கிற முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ள மணிகண்டன் பெண்களை குறிவைத்து செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேச்சுக் கொடுப்பதும் ஒத்துழைப்பு கொடுக்கும் பெண்களிடம் பேசிய பின்னர் மற்றவர்கள் பேச வசதியாக குரூப்பில் அதை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளாராம். மேலும் பேச மறுக்கும் பெண்களின் படங்களை அவர்களது “வாட்ஸ் ஆப்” “டிபி” யில் இருந்து போட்டோவை எடுத்து அதை முகநூல் பக்கத்தில் செல்போன் எண்களுடன் ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவதும் இதன்மூலம் அந்த முகநூல் பக்க குரூப்பில் உள்ள பலர், பெண்களை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.