மது அருந்துவதை போட்டுக்கொடுத்ததால் ஆத்திரமடைந்த போலீசார், தன்னுடன் பணிபுரிந்த சக போலீசாரை சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் மிசோராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் – அசாம் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது புர்சப் என்ற கிராமம். இந்த கிராமத்தில் சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இந்த இடத்தில் லால்ரவ்லா, இந்திரகுமார் ராய், பிமல் கண்டி சுக்மா என 3 காவல்துறை அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு பிமல் கண்டிக்கு குடிப் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் இவருக்கும், அந்த 2 போலீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிமலின் செய்கை பிடிக்காமல் லால்ரவ்லா, இந்திரகுமார் ராய் ஆகியோர் தங்கள் உயர் அதிகாரிகளிடம் பிமல் மது அருந்துவது குறித்து புகார் அளித்துள்ளனர். இதையறிந்த பிமல், அவர்கள் இருவரிடமும் நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறவே, ஆத்திரத்தில் தனது துப்பாக்கியை எடுத்து லால்ரவ்லா, இந்திரகுமார் ராய் ஆகிய 2 போலீசையும் சுட்டுள்ளார்.
பிமல் அவர்களை சுமார் 15 முறை சுட்டதில், இருவரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிமலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தன்னை பற்றி இருவரும் மேலதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால், சுட்டுக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதோடு சம்பவம் நடந்த அன்றும் அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.