வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழக முதல்வரின் இல்லத்திற்கு அருகிலேயே வாக்கு சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளனர் தி.முக வினர் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில், தேனாம்பேட்டை 122 வது வட்டம் வாக்கு சாவடி எண் 13 ல் பாஜக வின் கிளை முகவராக பணியாற்றிக் கொண்டிருந்த கெளதம் என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளைஞரை வாக்குச்சாவடிக்குள் புகுந்து தாக்கியுள்ளதோடு, வாக்குச் சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளது அண்ணா அறிவாலைய கும்பல்.
தகவலறிந்து பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்தும், திமுக வின் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் அழுத்தத்தினால் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்முறைக் கும்பலுக்கு ஆதரவாக பேசியதோடு, பாஜக வின் கெளதம் ஜாதி ரீதியாக பேசினார் என்ற உண்மைக்குப் புறம்பான தகவலை பொது வெளியில் கூறியுள்ளார் மயிலை வேலு அவர்கள். கெளதம் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் இப்பதிவில் உள்ளது. தி மு க வின் அராஜக செயலை மூடி மறைக்க ஜாதிய மோதலை உருவாக்க முனைகிறார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.
பாதிக்கப்பட்ட கெளதம் மற்றும் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தலைமை முகவர் கரு.நாகராஜன் அவர்கள் அளித்துள்ள புகாரின் மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மேலும், பாஜக நிர்வாகி, கெளதமை தாக்கிய தி.மு.க குண்டர்கள் மீதும், அவர்களுக்கு துணை நின்றதோடு ‘ஜாதி’ ரீதியான கலவரத்தை தூண்ட முனைந்த குற்றத்திற்காக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.