நம்மில் பலருக்கு காஃபி அருந்தினால் தான், ஒவ்வொரு நாளும் தொடங்கும். ஆனால், காஃபி பிரியர்களை கலங்க வைக்கும் அளவுக்கு காஃபி தூளின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவன ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தைகளில் காஃபி கொட்டைகளின் விலை 14 மாதங்களில் இரட்டிப்பாக உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த உயர்வுக்கு பிரேசில் நாட்டில் நிலவும் கடும் வறட்சி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
காஃபி உற்பத்தியில் 30 விழுக்காடு பங்குடன் பிரேசில் தான் உலக அளவில் முன்னணிகள் உள்ளது. அங்கு கடும் வறட்சியால் காஃபி விளைச்சல் குறைந்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஆசிய நாடான வியட்நாமிளும் காஃபி உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் காஃபி உற்பத்தி 20 முதல் 30% வரை குறைந்துள்ளதாக இத்தொழில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உலக காஃபி விளைச்சலில் இந்தியா 7-வது இடத்தில் இருந்தாலும் உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாத நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு தேவையை சமாளிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86 ரூபாய்க்கு கீழே சென்று கொண்டுள்ளதால், அதற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்தியாவில் அராபிகா வகை காபி கொட்டை விலை 750 ரூபாயும், ரொபஸ்டா காஃபி கொட்டையின் விலை 500 ரூபாயையும் தாண்டி அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உணவகங்களில் காஃபியின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. உலகெங்கும் காஃபி கொட்டை உற்பத்தி குறைந்தாலும், அதன் தேவை அதிகரித்து வருவது வேலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. காஃபி சீசனில் அடுத்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் வரை விலை உயர்வு போக்கு தொடரும் என்பது சந்தை நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.